×

அவதூறாக பேசிய எச்.ராஜாவை கண்டித்து வி.சி.கட்சியினர் சாலை மறியல்

செங்கல்பட்டு, டிச. 16: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை எச்.ராஜா அவதூறாக பேசியதைக் கண்டித்து அவரது உருவ பொம்மை வி.சி.கட்சியினர் எரித்ததுடன்  சாலை மறியலில் ஈடுபட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்,  தலைவர் தொல்.திருமாவளவனை அவதூறாக பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் அவரது உருவ பொம்மை எரித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாவட்ட செயலாளர் தமிழரசி தலைமையில் நகரச்செயலாளர் ரவீந்திரன், ஒன்றியச்செயலாளர் ராஜ்குமார் உட்பட 50க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து எச்.ராஜாவின் உருவபொம்மையை எரித்து செங்கல்பட்டு காஞ்சிபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு டவுன் இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜன் மறியல் செய்தவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதற்கு அவர்கள் உடன்படாமல் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதனால் போலீசார் 50 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தை அடைத்து வைத்தனர்.  இதேபோல், மறைமலை நகர் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் செங்கல்பட்டு தொகுதி செயலாளர் தென்னவன் தலைமையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எச்.ராஜா உருவபொம்மையை ஊர்வலமாக கொண்டு வந்து எரிக்க முயன்றனர். அப்போது மறைமலை நகர், இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையிலான போலீசார் உருவ பொம்மையை தண்ணீர் ஊற்றி அனைத்தனர். இதனால் போலீசாருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. மேலும் போலீசார் சாலை மறியல் செய்த 30 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்பு மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Tags : VCC ,H. Raja ,leaders ,
× RELATED ஆபாச கருத்து தெரிவித்த பா.ஜ.க நிர்வாகி...