கந்தர்வகோட்டை, டிச.12: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள் செயலற்று கிடக்கின்றன. இதனால் பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்கள் வீணாகி வருகின்றன.
ஒருங்கிணைந்த மகளிர்சுகாதார வளாகங்கள் 2001-04ல் தமிழகம் முழுவதும் 12,618 கிராம ஊராட்சிகளில் 750 சதுரஅடி பரப்பளவில் கட்டி துவக்கி வைக்கப்பட்டது. இதில் மின் மோட்டாருடன் நீரேற்று அறை, தண்ணீர் தொட்டி, துணி துவைக்கும் கல், தேவையான தண்ணீர் விநியோகம் ஆகியவற்றுடன் 14 கழிவறைகள் மற்றும் இரண்டு குளியல் அறைகள் கொண்ட கட்டிடம் கட்டி திறக்கப்பட்டது.
\அதே போல் 2012-13 ம் ஆண்டுகளில் 385 வட்டாரங்களில் 570 சதுர அடி பரபரப்பளவில் 4 லட்சம் மதிப்பீட்டில் 8 கழிவறைகள் கொண்ட கட்டிடம் 770 கட்டப்பட்டன. ஆனால் இவைகள் முறையாக பராமரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. பிறகு மீண்டும் 2011-12ல் 170 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டன. இவ்வாறு பல கோடிகள் செலவில் கட்டப்பட்ட சுகாதார வளாகங்கள் தற்போது கந்தர்வகோட்டை, அண்டனூர் உட்பட அனைத்து இடங்களிலும் செயலற்று கிடக்கின்றன. மீண்டும் இவைகள் பயன்பாட்டிற்கு வருமா அல்லது மாற்று திட்டங்களுக்காக பயன்படுத்தப்படுமா என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.