×

சின்னா பின்னமான பூங்கா, துண்டிக்கப்பட்ட சாலைகள் பொலிவிழந்த சொத்தவிளை கடற்கரை சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

சுசீந்திரம், டிச.7: குமரி மாவட்டத்தில் விடுமுறை நாட்களில் மக்கள் குடும்பமாக சென்று பொழுதை கழிக்க பல இடங்கள் உள்ளன. குறிப்பாக திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டி பாலம், கன்னியாகுமரி, வட்டக்கோட்டை என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த இடங்கள் அனைத்தும் அதிகாரிகளின் மெத்தனபோக்கால் போதிய பராமரிப்புகள் இல்லாமல் உள்ளன.இது தவிர அடிப்படை வசதிகள் என்பது மருந்துக்கு கூட இல்லை என்ற குற்றச்சாட்டு அனைவரது மத்தியிலும் எழுந்து இருக்கிறது. இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள ஒரு சுற்றுலா பகுதிதான் சொத்தவிளை கடற்கரை. குமரியின் நீளமான கடற்கரை பகுதி என்ற சிறப்பும் இந்த கடற்கரைக்கு இருக்கிறது. நாகர்கோவிலில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு சீசன் காலம் என்றில்லாமல் தினசரி சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இப்படி வருகின்றவர்கள் பலர் அங்கிருந்து நேராக சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து சொத்தவிளை கடற்கரைக்கு வருகின்றனர். முன்பு இவ்வாறு வந்து சென்ற சுற்றுலா பயணிகளுக்கு பஸ்வசதிகள் அதிகமாக இருந்தன. இதனால் கடற்கரை பகுதியும் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இந்த நிலையில் கன்னியாகுமரியில் இருந்து சொத்தவிளை கடற்கரைக்கு வரும் சாலை, ஓகி புயலின் கோர தாண்டவத்தால் பெருத்த சேதமடைந்தது. சிறிய வாகனங்கள் கூட சென்று வர முடியாத அளவுக்கு அந்த சாலை பல இடங்களில் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதையடுத்து பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் நாளடைவில் சுற்றுலா பயணிகள் சொத்தவிளை வருவது குறைந்தது.

இந்த நிலை இப்போதுவரை நீடித்து வருகிறது. சொத்தவிளை கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி பொழுது போக்கு பூங்கா அமைக்கப்பட்டிருந்தது. பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்ட பூங்காவில் தற்போது எந்தவித வசதிகளும் இல்லை. சின்னா பின்னமாகி பூங்காபோல் இல்லாமல் அலங்கோலமாக காணப்படுகிறது.குழந்தைகள் விளையாடும் சறுக்குகள், ஊஞ்சல்கள் தொடங்கி ஓய்வு எடுப்பதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சிலாப்புகள் வரை அனைத்தும் உடைந்து கிடக்கின்றன. இவற்றை சரி செய்வதற்கான எந்தவித நடவடிக்கையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுத்ததாக தெரியவில்லை. இதே போல் பாதுகாப்பு வசதி என்பதும் கேள்வி குறியாகி உள்ளது. சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மக்கள் அதிகமாக வந்து செல்கின்றார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட போலீசார் மருந்துக்கு கூட அந்த பகுதியை எட்டிபார்ப்பது இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து இருக்கிறது. இது குற்றவாளிகளுக்கு சாதகமாக போய்விட்டது. சுற்றுலா பயணிகளை வழி மறித்து பணம், நகையை பறிப்பது அவ்வப்போது அரங்கேறுகிறது.
இது தவிர கடலில் பாதுகாப்பு வேலிகள் எதுவும் அமைக்கவில்ைல. இதனால் ஆனந்தமாய் குளிப்பவர்கள் ஆர்வ கோளாறால் ஆழமான பகுதிக்கு சென்று விடுகின்றனர். ராட்சத அலைகள் அவர்களை இழுத்து சென்று விடுகின்றன. சமீபத்தில் மாணவர்கள் உள்பட 3 பேரை இழுத்து சென்றதாக அந்த பகுதிைய சேர்ந்த பொது மக்கள் கூறுகின்றனர். சொத்தவிளை கடற்கரையை உரிய முறையில் பராமரித்து, கூடுதல் வசதிகள் செய்தால் விடுமுறை நாளில் பொது மக்கள் கூட்டமாக வந்து பொழுதை கழிக்க வசதியாக இருக்கும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக விரோத கும்பல் அட்டகாசம்
குடும்பமாக பொழுதை கழிக்க வேண்டும்  என்று ஆசையில் வருகின்றவர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதி, அடிப்படை வசதிகள்  ஆகியவை சரியான முறையில் இல்லாததால் பொது மக்கள் சொத்தவிளை பீச்சை  முற்றிலுமாக புறக்கணித்து விட்டனர். தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக  சொத்தவிளை பீச் மாறிவிட்டது. இதை நிருபிக்கும் வகையில் பயணிகள் அமர்ந்து இருக்கும் இடங்களில் மது பாட்டில்கள் கிடப்பதை ஆங்காங்கே பார்க்க முடிகிறது.

Tags : Chinna ,Later Park ,roads ,
× RELATED புதுக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு...