×

கோரிக்கைகளை வலியுறுத்தி கெங்கவல்லியில் விஏஓக்கள் உள்ளிருப்பு போராட்டம்

கெங்கவல்லி, டிச.6: கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 18 கிராமங்களை சேர்ந்த விஏஓக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கெங்கவல்லி தாலுகாவில் 40 வருவாய் கிராமங்கள் உள்ளன. பட்டா மாற்றம், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் இதர வருவாய் இனங்கள் மேற்கொள்ள கெங்கவல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால், 11 வருவாய் கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் இடம் காலியாக உள்ளது. இப்பணிகளை நிரப்ப வேண்டியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், நேற்று கெங்கவல்லி தாலுகா அலுவலத்தில் உள்ளே, கெங்கவல்லி வட்ட தலைவர் பெரியண்ணன் தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை முழு நேர தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்தில் 15 ஆண்கள், 3 பெண்கள் உள்ளிட்ட 18 கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டனர். இதனால் கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : VAOs ,Kankavalli ,urging ,
× RELATED ேவன் மீது ரயில் மோதி 9 விஏஓக்கள் பலியான...