×

வீரதீர செயல் புரிந்த பெண் குழந்தைகளுக்கான மாநில விருது தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

கரூர்,டிச.6: வீரதீர செயல்புரிந்த பெண் குழந்தைகளுக்கான மாநில விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.இது குறித்து கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது:தமிழக அரசு, சமூக நலம் சத்துணவு திட்டத்துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளுக்கும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், குழந்தை திருமணத்தை தடுக்கவும், பாடுபட்டு வீரதீர செயல் புரிந்த வரும் 18வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில் அதற்கான மாநில விருது ஒன்றை அறிவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு கடந்தாண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதன்படி, ஆண்டுதோறும் சேவை புரிந்து வரும் சிறந்த குழந்தை ஒருவருக்கு தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜனவரி 24) பாராட்டு பத்திரமும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவி நந்தினி என்ற சிறுமிக்கு, அவர், தனக்கு நடக்கயிருந்த குழந்தை திருமணத்தை துணிச்சலுடன் போராடி நிறுத்தியதற்காக கடந்த ஆண்டு ஜனவரி 24ம்தேதி அன்று ஒரு லட்சத்திற்கான காசோலையும், பாராட்டு பத்திரமும் வழங்கப்பட்டது.

இதே போன்று, வரும் ஜனவரி 2019ல் தேசிய பெண் குழந்தை தினத்தில் மாநில விருது வழங்கிட 18 வயதுக்குட்பட்ட (டிசம்பர் 31 2018ன்படி) தகுதியான பெண் குழந்தைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் டிசம்பர் 15ம்தேதி வரை வரவேற்கப்படுகிறது.
விருதுக்கான விண்ணப்பங்கள் தலைமையாசிரியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்), காவல்துறை, தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் வாயிலாக உரிய முன்மொழிவுகளுடன் மாவட்ட சமூக நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் கூர்ந்தாய்வு செய்து, மாவட்ட கலெக்டர் பரிந்துரையுடன் சமுக நல ஆணையகத்துக்கு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்படும். மாவட்டங்களில் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மாநில அளவில் தேர்வு குழு மூலம் பரிசீலனை செய்யப்பட்டு, அனைத்து தகுதிகள் பெற்ற ஒரு பெண் குழந்தை தேர்வு செய்யப்படடு ஜனவரி 24ல் மாநில விருது வழங்கப்படும்.
5வயதுக்கு மேல் 18வயதுக்குட்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தைகள் (டிசம்பர் 31ன்படி) இருக்க வேண்டும். பரிந்துரையில் குழந்தையின் பெயர், தாய், தந்தை முகவரி, ஆதார் எண், புகைப்படம் ஆகியவற்றுடன் குழந்தை ஆற்றிய அசாதாரணமான வீர, தீர செயல் மற்றும் சாதனைகள் ஆகியவற்றின்  ஒரு பக்கத்திற்கு மிகாத குறிப்பு மற்றும் அதற்கான ஆதாரங்கள் இணைக்க வேண்டும். டிசம்பர் 15ம்தேதிக்குள் உரிய பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : state award winner ,children ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...