×

வள்ளியூர் போலீசில் சீமான் மீது புகார்

வள்ளியூர், டிச. 6: இந்து கடவுள்களை கேவலப்படுத்தி பேசிய நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வள்ளியூர் போலீசில் பிஇ பட்டதாரி புகார் அளித்துள்ளார்.வள்ளியூர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் மகரஜோதிபாபு. பிஇ பட்டதாரியான இவர், டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார். இவர், வள்ளியூர் போலீசில் நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு பிறகு, சிலர் சபரிமலை ஐயப்பன் கோயிலை சமூக வலைதளங்களில் தவறாக விமர்சித்து வருகின்றனர். கடந்த 1ம் தேதி எனது சமூக வலைதள பக்கத்திற்கும் நாம்தமிழர் கட்சியின் வலைதள பக்கத்தில் இருந்து சீமானின் உரை வந்தது.

அதில், நான் பெரிதும் போற்றக்கூடிய சபரிமலை சுவாமி ஐயப்பன் குறித்து மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் கேவலப்படுத்தி உள்ளார். இது என்னைப் போன்ற சபரிமலை பக்தர்கள் மற்றும் இந்து மக்கள் மனம் புண்படுத்தி உள்ளது. எனவே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்த வேண்டும்.  இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Seeman ,Valliyur ,
× RELATED மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை...