×

மழையால் பாதிக்காத திருச்சி 3 ரக நெல்விதை தட்டுப்பாடின்றி கிடைக்குமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

தரங்கம்பாடி,டிச.4: மழை, வெள்ள காலங்களில் பாதிக்காமல் விவசாயிகளுக்கு பலன் தரும் திருச்சி 3 ரக நெல் விதைகளை விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி கிடைத்திட வேளாண்துறை நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு உதவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சம்பா, தாளடி பயிர்களுக்கு திருச்சி 3 ரக நெல் மிகவும் ஏற்றதாக உள்ளது. மழை, வெள்ளதால் மூழ்கினாலும் பயிர் அழுகாமல், பாதிக்கப்படாமல் உள்ளது. எனவே திருச்சி 3 ரக நெல்லை சம்பா-தாளடி பயிர்களில் பயிரிட விதை நெல் தட்டுப்பாடின்றி கிடைத்திட வேண்டும்.  அதற்கு வேளாண்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து திருவிளையாட்டம் விவசாயி துரைராஜ் கூறியதாவது: மழை, வெள்ளம் காலங்களில் சம்பா தாளடிக்கு ஏற்ற பயிராக திருச்சி 3 ரக நெல் உள்ளது. நான் 8 ஏக்கரில் சாகுபடி செய்துள்ளளேன். கடந்த மழை புயலில் எந்த சேதமும் அடையவில்லை.

மழை தண்ணீர் தேங்கி நின்றாலும் பயிர் அழுகவில்லை. அடி உரம் போட்டால் மட்டும் போதும். யூரியா போட வேண்டிய அவசியம் இல்லை. பயிர் நன்றாக வளர்ந்து நல்ல மகசூலையும் கொடுக்கிறது.  உவர் தண்மை கொண்ட நிலத்திற்கும் இந்த ரக நெல் மிகவும் ஏற்றது.  இந்த பயிருக்கு பூச்சி நோய் வருவதில்லை. நான் 2 ஆண்டுகளாக இதை பயிரிட்டு வருகிறேன். இந்த விதை நெல்லை விவசாயிகள் அதிகம் பேர் என்னிடம் கேட்கிறார்கள். எல்லா விவசாயிகளுக்கும் என்னால் கொடுக்க முடியவில்லை. வேளாண்துறை பாரிந்துரைத்த நெல் ரகம் தான் இது. அவர்களும் அதிக அளவில் விதை கொடுக்க முடியாமல் உள்ளனர். வரும் சம்பா தாளடி பயிர்களுக்கு விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி திருச்சி 3 விதை நெல்  கிடைக்க வேளாண்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Tags : Trichi 3 ,rainfall ,
× RELATED தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில்...