சேலம், டிச.4: சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு, டி.பெருமாபாளையத்திற்கு தனியார் டவுன் பஸ் புறப்பட்டுச் சென்றது. இந்த பஸ், நள்ளிரவு 11 மணியளவில் வீராணத்தை அடுத்துள்ள கத்தாளப்பாடி பகுதியில் சென்ற போது, பஸ்சின் பின்னால் நின்றபடி மர்மநபர்கள் கற்களை வீசி தாக்கினர். பின்பக்க கண்ணாடியில் கற்கள் வந்து விழுந்தவுடன், அது நொறுங்கியது. இதனால், பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்தபடி முன்பக்கம் ஓடினர். பின்னர், பஸ்சை நிறுத்தி பார்த்தபோது, அங்கு நின்றிருந்த மர்மநபர்கள் ஓட்டம் பிடித்தனர். இதுபற்றி வீராணம் போலீசில் டிரைவர், கண்டக்டர் புகார் கொடுத்தனர். அதன் பேரில், பஸ்சின் மீது கல் வீசி கண்ணாடியை உடைத்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.