தூத்துக்குடி, டிச. 4: சாத்தான்குளம் வட்டாரத்தில் கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கலெக்டரிடம் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, சாத்தான்குளம் வட்டார மணிமுத்தாறு 4வது ரீச் விவசாயிகள் சங்கத் தலைவர் நம்பிராஜ் தலைமையில் திரண்டுவந்த பாசன விவசாயிகள் கலெக்டரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு: சாத்தான்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள விவசாய நிலங்கள் மணித்தாறு பாசனக்கால்வாய் மூலமாக பாசன வசதி பெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த பருவமழையால் இப்பகுதியிலுள்ள குளங்களில் ஒரளவிற்கு தண்ணீர் நிரம்பியது. இதனை நம்பி இப்பகுதியிலுள்ள சுமார் 4 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் தற்போது நெல்பயிர் சாகுபடி செய்துள்ளோம்.இந்தநிலையில் குளங்களில் குறைந்த அளவு தண்ணீர் இருப்பதால் அது பாசனத்திற்கு போதாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதனால் கருகும் நெற்பயிர்களை காப்பாற்றிட ஏதுவாக மணிமுத்தாறு அணையில் இருந்து நான்காவது ரீச்சில் போதுமான அளவிற்கு தண்ணீர் திறந்துவிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.