கடையம், நவ. 29: கடையம் அருகே சபரிநகரில், குழாய் உடைப்பால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கடையம் ஊராட்சி ஒன்றியம், கடையம் பெரும்பத்து பஞ்சாயத்துக்குட்பட்ட சபரி நகரில் கழிவுநீர் ஓடை அமைப்பதற்காக ஜேசிபி மூலம் குழிகள் தோண்டும் பணி நடந்து வருகிறது. கடந்த வாரம் பணி நடந்தபோது சபரி நகருக்கு செல்லும் மெயின் குடிநீர் குழாய் உடைந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்களும் உடைந்தன. இதனால் இப்பகுதி மக்கள், கடந்த ஒரு வார காலமாக குடிநீருக்காக திண்டாடி வருகின்றனர்.
மெயின் லைனும், வீட்டு இணைப்புக்கான குடிநீர் இணைப்புகளும் உடைந்த நிலையில், புதிதாக பைப் லைன் அமைக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கு காலதாமதமாகும் சூழலும் காணப்படுகிறது. எனவே போர்க்கால நடவடிக்கை எடுத்து இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை ஊராட்சி நிர்வாகம் சரிசெய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.