நெல்லை, நவ. 29: நல் ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பு இன்மை, குடும்ப சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாணவிகள் மனஅழுத்தம், படிப்பில் கவனக்குறைவு போன்ற குறைபாடுகளுடன் உள்ளனர். இவர்களுக்கு உதவும் திட்டம் குறித்து மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறியதாவது:
மாணவர்களுக்கு பள்ளிகளில் நல்ஒழுக்க போதனைகள் வழங்கப்படுகின்றன. 5ம் வகுப்பிற்கு மேல் பயிலும் மாணவிகளுக்கு தேவையான கவுன்சலிங் மற்றும் ஆலோசனைகளை வழங்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும். இவர்கள் முதற்கட்டமாக சில பள்ளிகளில் உள்ள மாணவிகளுக்கு ஆலோசனை வழங்குவார்கள். தொடர்ந்து பெரியஅளவில் இதனை நடத்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவர் பாலா கூறியதாவது: ‘அனைத்துப்பள்ளிகளிலும் ஆசிரியர்கள் வகுப்பிற்கு சென்றதும் பாடத்தை தொடங்குவதற்கு முன்னர் குறைந்தது 10 நிமிடம் வாழ்க்கை கல்வி குறித்த பொது போதனைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. கலெக்டரின் ஆலோசனைப்படி மேலும் விரிவாக இதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.