×

கயத்தாறு காவல்நிலையத்தில் மயங்கி விழுந்த போலீஸ்காரர் சிகிச்சை பலனின்றி சாவு

கயத்தாறு நவ.28: கயத்தாறு காவல்நிலையத்தில் உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்த போலீஸ்காரர் சிகிச்சை பலனின்றி இறந்தார். நாலாட்டின்புதூர் சரவணாபுரத்தைச் சேர்ந்தவர் முத்தையா மகன் ராஜாமாரி (47). கயத்தாறு காவல்நிலையத்தில் கடந்த 2016ம் ஆண்டு முதல் தலைமைக்காவலராக பணிபுரிந்து வந்தார். 2000ம் ஆண்டு மே மாதம் பணியில் சேர்ந்து 18 வருடங்களாக காவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த 23ம் தேதி காவல்நிலையத்தில் பணியில் இருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு ராஜாமாரி மயங்கி விழுந்தார்.

சக போலீசார், அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். அவருக்கு அரியநாச்சியார் என்ற மனைவியும், முத்தமிழ்(25) என்ற மகனும், பிரியா(21) என்ற மகளும் உள்ளனர். முத்தமிழ் சென்னையில் ஆயுதப்படை காவலராகவும், பிரியா நீட் தேர்விற்காக பயிற்சி பெற்றும் வருகிறார். பணியின் போது போலீஸ்காரர் மயங்கி விழுந்து இறந்தது குறித்து இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : policeman ,Kayattur ,police station ,
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...