×

தீபாவளி பண்ட் நடத்தி 80 லட்சம் மோசடி

சென்னை, நவ. 28: தீபாவளி பண்ட் நடத்தி 500 பேரிடம் 80 லட்சம் மோசடி செய்தும், பணத்தை கேட்டு வாலிபரையும் கடத்திய கணவன், மனைவி, மகனை போலீசார்  கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பழத்தோட்டத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (50). இவரது மனைவி சத்யா (42). இவர்களது மகன் பரணிதரன் (22), செங்கல்பட்டில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வருகிறார். சாமிநாதனும், சத்யாவும் தீபாவளி பண்ட் சீட்டுகள் நடத்தி வருகின்றனர். இவர்களிடம் 500க்கும் மேற்பட்டோர், பண்ட் கட்டினர். அந்த வகையில் மொத்தம் 80 லட்சம் வரை சாமிநாதனும், சத்யாவும் பண்ட் பணம் வசூலித்துள்ளனர். இந்நிலையில், தீபாவளி நெருங்கிய நேரத்தில் பணம் கட்டியவர்கள், தீபாவளி பண்ட் கேட்டனர். ஆனால் சாமிநாதன் பொருட்களை தராமல் காலம் கடத்தி வந்துள்ளார். கடந்த 11ம் தேதி திம்மாவரத்தில் குமார் (35) என்பவர் மூலம் பண்ட் பணம் கட்டியவர்கள், குமாரிடம் பொருட்களை கேட்டனர். இதையடுத்து ஒருநாள், ‘‘பட்டாசு வாங்கி வர சிவகாசிக்கு செல்ல வேண்டியுள்ளது, நீயும் வா’’ என்று குமாரை தம்பதியினர் அழைத்துள்ளனர். குமாரும் சம்மதித்துள்ளார்.

இதையடுத்து வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் லாரியில் ஏற்றினர். இதனால், சந்தேகமடைந்து குமார் கேள்வி எழுப்பியபோது, அதற்கு தம்பதியினர், ‘‘தீபாவளி பண்ட் பற்றி வாய் திறந்தால் அவ்வளவுதான், கொலை செய்து விடுவோம்’’ என்று மிரட்டியுள்ளனர். இதையடுத்து அனைவரும் லாரியில் திருச்செந்தூருக்கு சென்று விட்டு குற்றாலத்துக்கு சென்றனர். அங்குள்ள இடங்களை பார்த்து விட்டு நாகப்பட்டினத்துக்கு வந்தனர். அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அனைவரும் தங்கினர். குமாரை ஒரு வீட்டில் அடைத்து வைத்து அடித்து உதைத்து சித்ரவதைப்படுத்தினர். இதற்கிடையில் குமாரை காணவில்லை என்று அவர்களது உறவினர்களும் தேடி வந்தனர்.
இந்நிலையில், நாகையில் வீட்டில் அடைக்கப்பட்டிருந்த குமார், நைசாக வெளியே வந்து, நடந்த விவரத்தை அப்பகுதியில் உள்ள வாலிபர்களிடம் கூறிவிட்டு மீண்டும் வீட்டுக்குள் சென்று விட்டார். இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த இளைஞர்கள், செங்கல்பட்டில் உள்ள குமாரின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த உடனே, செங்கல்பட்டு தாலுகா இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசாரும் நாகைக்கு விரைந்தனர். வீட்டில் அடைக்கப்பட்டிருந்த குமாரை மீட்டனர். பின்னர், அங்கிருந்த சாமிநாதன், சத்யா, பரணிதரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.இதற்கிடையில் சம்பவம் குறித்து கேள்விபட்டதும், தீபாவளி பண்ட் கட்டியவர்கள், செங்கல்பட்டு தாலுகா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...