திருச்சி, நவ.27: துவாக்குடியில் தனியார் இன்ஜினியரிங் நிறுவன ஊழியர் தனது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் மகேஷ்யாதவ்(47). திருச்சி துவாக்குடியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் நிறுவனத்தில் உதவியாளராக கடந்த 10 நாட்களாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் தான் தங்கியிருந்த அறையில் நேற்று தூங்கிக்கொண்டிருந்த மகேஷ்யாதவ் வாயில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த துவாக்குடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.