தொட்டியம், நவ.27: தொட்டியம் அருகே நூல்கண்டு ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்ததால் அவ்வழியாக போக்குவரத்துபாதிக்கப்பட்டது. திருச்சி - நாமக்கல் சாலையில் மேய்க்கல்நாயக்கன்பட்டி அமைந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து நூல்கண்டு லோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று நேற்று மும்பை நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை முசிறி அருகே உள்ள தும்பலம் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் செல்வகுமார் ஓட்டி சென்றார். திருச்சி- நாமக்கல் சாலையில் உள்ள மேய்க்கல்நாயக்கன்பட்டியை கடந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில் நூல்கண்டு மூட்டைகள் சாலையில் சரிந்தது. இதனால் அவ்வழியாக சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதித்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு போக்குவரத்தை சரிசெய்தனர். லாரியில் டிரைவர் மட்டுமே இருந்தார். அவர் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினார். இதுகுறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.