திருவள்ளூர்: திருவள்ளூர், திருத்தணி பகுதிகளில் பூட்டியிருந்த வீடுகளை உடைத்து நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருவள்ளூர் அடுத்த புட்லூர் கணேஷ் விஷ்தா நகரை சேர்ந்தவர் சங்கர்(35). தனியார் நிறுவனத்தில் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி(30). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டிவிட்டு, உறவினர் வீட்டு கிரகபிரவேச நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இரவு திரும்பினர்.
அப்போது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 10 சவரன் நகைகள், 200 கிராம் வெள்ளி பொருட்கள், ₹10 ஆயிரம் கொள்ளை போனது தெரிந்தது.இதுகுறித்த புகாரின்பேரில் செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருத்தணி: திருத்தணியை அடுத்த டீச்சர்ஸ் நகரில் வசிப்பவர் சேஷாச்சலம் மகன் சுப்பிரமணி (25). தனியார் கம்பெனி ஊழியர். இவர், கடந்த 24ம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள சென்றார். அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு அனைவரும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். படுக்கை அறையில் உள்ள பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த செயின், மோதிரம் உள்பட 18 சவரன் நகை, 550 கிராம் வெள்ளி மற்றும் வீட்டு சேமிப்பில் வைத்திருந்த உண்டியல் பணம் ரூ.5 ஆயிரம், லேப்டாப் 2, கேமரா ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.இதுகுறித்த புகாரின்பேரில் திருத்தணி டிஎஸ்பி சேகர், இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள் பற்றி விசாரித்து வருகின்றனர்.