×

தா.பேட்டை - துறையூர் சாலையில் பாலப்பணி தாமதத்தால் வாகன ஓட்டிகள் அவதி

தா.பேட்டை, நவ.23: தா.பேட்டையிலிருந்து - துறையூர் செல்லும் சாலையில் சிறுபாலம் கட்டும்பணி ஆமைவேகத்தில் நடப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   தா.பேட்டையிலிருந்து - துறையூருக்கு செல்லும் சாலையில் கண்ணனூர்பாளையத்திற்கு முன்பாக சிறு பாலம் கட்டும் பணி துவங்கி பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. இப்பணியை விரைந்து முடித்து போக்குவரத்து செல்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கண்ணனூரை சேர்ந்த சேகர் கூறும்போது, கண்ணனூர்பாளையத்திற்கு முன்பாக சிறு பாலம் கட்டும் பணி பல மாதங்களாக நடைபெற்று வந்தநிலையில் தற்போது எந்த பணியும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்த பாலத்தை கட்டி முடிக்காததால் பாலத்தின் வழியாக செல்லவேண்டிய வாகனங்கள் அருகே அமைக்கப்பட்ட மாற்றுப்பாதையில் செல்கிறது. மாற்றுப்பாதையும் மழை காரணமாக சேறும், சகதியுமாக இருப்பதால் வாகனங்கள் எளிதாக செல்ல முடியவில்லை. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பாலம் கட்டும் பணியை விரைந்து முடித்து போக்குவரத்து செல்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நடைபெறும் இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

Tags : Motorists ,road ,Thottai - Thuraiyur ,
× RELATED ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு புதுப்பொலிவு பெற்ற கரிசல்குளம் சாலை