தூத்துக்குடி, நவ. 23: தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிவரும் மினிபஸ்கள், பழைய பஸ் நிலையத்திற்குள் இறக்கிவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் முருகபூபதி ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு வரும் தொடர்வண்டி தினசரி அதிகாலை சுமார் 4 மணியளவில் மேலூர் தொடர்வண்டி நிலையத்திற்கு வந்து சேர்கிறது. அந்த தொடர்வண்டியில் வரும் பயணிகள் மேலூர் தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி அங்கு நிற்கும் தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்திற்கு செல்லும் மினிபஸ்சில் ஏறி பயணம் செய்கின்றனர். தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றி புதிய பஸ் நிலையம் வழியாக பழைய பஸ் நிலையத்திற்கு வரும் மினிபஸ்கள், பழைய பஸ் நிலையத்திற்குள் சென்று பயணிகளை இறக்கிவிடவேண்டும். ஆனால் மினிபஸ்கள், அவ்வாறு செல்லாமல் மீனாட்சிபுரம் விலக்கில் பயணிகளை வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டுவிட்டு செல்கின்றன.
இதனால் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே இந்தப் பகுதியில் அதிகாலை 4.15 மணிக்கு வந்து இறக்கி விடப்படும் பயணிகளின் உடமைக்கும் உயிருக்கும் சரியான பாதுகாப்புகள் இல்லை. மேலும் பயணிகள் பழைய பஸ் நிலையத்திற்குள் சென்றுதான் இறக்கிவிட வேண்டும் என மினிபஸ் டிரைவர், கண்டக்டரிடம் கூறினால் அவர்கள் பயணிகளை மிகவும் தரக் குறைவாக மரியாதையின்றி பேசுகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே பயணிகள் பொதுமக்கள் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் மாற்றுதிறனாளிகள் பாதுகாப்பை கருதி மினிபஸ்களை அதிகாலை நேரத்தில் பழைய பஸ் நிலையத்திற்குள் சென்று பயணிகளை இறக்கிவிட உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.