வேலூர், நவ.23: பெண்கள் சிறைகளில் காலியாக உள்ள துணை, உதவி ஜெயலிர் பணியிடங்களுக்கான பதவி உயர்வுக்கான நேர்காணல் மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், பெண்கள், மாவட்ட கிளை சிறைகள் என மொத்தம் 185 சிறைகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தலைமை காவலர்கள், முதன்மை தலைமை காவலர்களுக்கு பதவி உயர்வுக்கான தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்தாண்டு வேலூர், புழல், திருச்சி, கோவை, மதுரை ஆகிய 5 பெண்கள் சிறைகள் மற்றும் கிளை சிறைகளில் காலியாக உள்ள 6 துணை ஜெயிலர் பணியிடங்கள் மற்றும் 16 உதவி ஜெயிலர் பணியிடங்களுக்கான என மொத்தம் 22 பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகிறது. அதன்படி, நேர்காணல் வேலூர் மத்திய சிறை வளாகத்தில் நேற்றும், இன்றும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்து. தமிழகத்தில் சென்னை மற்றும் வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் நேர்காணல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.