மதுராந்தகம், நவ.23: மதுராந்தகம் கிளியாறு ஒட்டிய பகுதியில் மதுராந்தகம் சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சுமார் 25 ஏக்கர் நிலத்தில் சில தினங்களுக்கு முன்பு நெற்பயிர் நடவு செய்யப்பட்டது.
தற்போது பெய்யும் கனமழையின் காரணமாக இப்பகுதியில் மழை நீர் பாய்ந்து ஓடுகிறது. இப்பகுதியிலிருந்து கினார் ஊராட்சி நோக்கி செல்லும் மழைநீர் வடிகால்வாய் உள்ளது. இந்த கால்வாய் தூர்வாரப்படாமல் விடப்பட்டதாலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாலும் தூர்ந்து போனது. இதனால் இப்பகுதியிலிருந்து மழைநீர் வெளியேற முடியவில்லை. எனவே இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெல் வயல்களில் மழைநீர் புகுந்து விட்டது. இதனால் பயிர்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. மழை நீரை உடனடியாக வெளியேற்ற அரசு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்குள்ள விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.