போடி, நவ. 21: பால் கேன்களில் பால் கொண்டு செல்வதைப்போல் டூவீலரில் ரேஷன் அரிசி கடத்தியவரை பறக்கும் படையினர் பிடித்து பறிமுதல் செய்தனர்.போடி பகுதியில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கேரள மாநிலத்திற்கு கடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து உத்தமபாளையம் பறக்கும் படை துணை தாசில்தார் ஜாகீர்உசேன், ஆர்.ஐ. பாலசுப்பிரமணி ஆகியோருக்கு ரகசிய தகவல்கள் வந்தன.
இதையடுத்து பறக்கும் படையினர் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று போடிமெட்டு மலை அடிவாரம் போலீஸ் செக்போஸ்டில் மலைக்கு சென்ற அரசு பஸ்களை சோதனை செய்தனர். அப்போது 5 பெரிய சாக்கு பைகளிலும், 5 சிறிய சாக்கு பைகளிலும் ரேஷன் அரிசி இருந்ததை பறிமுதல் செய்தனர். பின்னர் போடி மூன்றாந்தால் வள்ளுவர் சிலை அருகில் ஆய்வு செய்தனர். அப்போது போ.மீனாட்சிபுரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் டூவீலரில் 10 பால் கேன்களை கொண்டு வந்தார். சந்தேகமடைந்த பறக்கும் படையினர் டூவீலரை வழி மறித்து சோதனை செய்தனர். இதில் ஒரு மூடை ரேஷன் அரிசியும், 10 பால் கேன்கள் முழுவதும் ரேஷன் அரிசி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவற்றை பறிமுதல் செய்து, மேலும் பல இடங்களில் சிக்கிய 500 கிலோ ரேஷன் அரிசி மூடைகளையும் பறிமுதல் செய்து போடி அரிசி சேமிப்பு கிடங்கில் ஒப்படைத்தனர்.