×

திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது ராணிப்பேட்டை அருகே பரபரப்பு

ராணிப்பேட்டை, நவ.21: ஆற்காடு கிருஷ்ணாவரம் கோட்ரஸ் தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகரன்(26), பெயிண்டர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். ஆற்காடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். பிளஸ்2 முடித்துள்ள இவர் ஆற்காட்டில் உள்ள கடையில் வேலை செய்து வருகிறார். ராஜசேகரன் தனக்கு திருமணமானதை மறைத்து இளம்பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் காதலாக மாறியது. இந்நிலையில் கடந்த ஆண்டு ராஜசேகரன், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி தனிமையில் இருந்துள்ளார். அதன்பின்னர் பலமுறை இருவரும் தனிமையில் இருந்தார்களாம்.

இதற்கிடையில் ராஜசேகரனுக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பது அறிந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். கடந்த 15ம் தேதி இரவு இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்த ராஜசேகரன், தனிமையில் இருக்க அழைத்துள்ளார். அதற்கு இளம்பெண், ‘உனக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதை என்னிடம் மறைத்து ஏமாற்றிவிட்டாய்’ எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகரன், இளம்பெண்ணை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து இளம்பெண் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் நேற்றுமுன்தினம் புகார் செய்தார். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி வழக்குப்பதிந்து ராஜசேகரனை கைது செய்து ராணிப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தார்.

Tags : penny ,Ranipettu ,
× RELATED சென்னையில் உலக பத்திரிகை தினவிழா:...