கும்பகோணம், நவ. 20: உலக நன்மை வேண்டி சுவாமிமலை முருகன் கோயிலுக்கு திருபுவனத்தை சேர்ந்த பக்தர்கள் காவடி எடுத்து சென்று வழிபாடு நடத்தினர். உலக நன்மை வேண்டி கார்த்திகை மாத சோமவார தினத்தன்று சுவாமிமலை முருகன் கோயிலுக்கு கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்த நெசவாளர்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பால்குடம், காவடி எடுத்து சென்று வழிபடுவது வழக்கம்.
அதன்படி கார்த்திகை முதல் சோமவார தினமான நேற்று திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், பால்காவடியை பாதயாத்திரையாக சுவாமிமலை சுவாமிநாத கோயிலுக்கு சென்றனர். கும்பகோணம் நகரின் வழியாக சுவாமிமலைக்கு 300 பேர் காவடிகளை எடுத்தும், 400 பேர் பாதயாத்திரையாகவும் சென்றனர். பின்னர் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டனர்.