சுசீந்திரம், நவ. 20: சுசீந்திரம் அருகே உள்ள நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகரில், அந்தியோதயா திட்டத்தில் தெருக்களை சீரமைக்க ₹8 லட்சத்து 80 ஆயிரம் செலவில் அலங்கார கற்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. அப்பகுதியை சேர்ந்த இளங்கோ என்பவரது வீட்டை ஒட்டிய பகுதியில் அலங்கார கற்கள் பதிக்காமல் பணி நடந்தது. அவரது வீடு சற்று உள்வாங்கிய பகுதியில் இருப்பதால் அலங்கார கற்கள் பதிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. அதேவேளை, ஒரு கால் இழந்த மாற்றுத்திறளாளியான இளங்கோவின் தந்தை சந்தனத்தால் சகதி தேங்கியுள்ள பாதை வழியாக வீட்டிற்கு சென்று வருவதில் சிரமம் உள்ளதால் அந்த பகுதியிலும் அலங்கார கற்கள் பதிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தங்கள் வீட்டு முன்பு பணி முடிந்த பின்னர் மற்ற இடங்களில் பணி செய்ய வலியுறுத்தி மாற்றுத்திறனாளியான தனது தந்தை உள்பட குடும்பத்துடன் இளங்கோ தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்ததும் சம்பந்தப்பட்ட பொறியாளர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். நிதி ஒதுக்கீடு வந்த பின்னர் தான் அங்கு பணி தொடங்க முடியும், அதற்கு சில வாரங்கள் ஆகும் என தெரிவித்தார். ஆனால், தங்கள் வீட்டு முன்பகுதியிலும் அலங்கார கற்கள் பதிக்க வலியுறுத்தி இளங்கோ அவரது மனைவி குழந்தைகள், பெற்றோருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று 4வது நாளாக போராட்டம் நீடித்தது.