மண்ணச்சநல்லூர், நவ.15: மண்ணச்சநல்லூரில் திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் வாழை விவசாயிகளுக்கு சிறப்பு செயல்விளக்க பயிற்சி அளித்தனர். திருச்சி நவலூர் குட்டப்பட்டு மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் மாணவிகள் மண்ணச்சநல்லூர் பகுதியில் ஊரக தோட்டக்கலை பணி அனுபவத்தின் கீழ் சிறப்பு முகாம் மேற்கொண்டுள்ளனர்.அதன்படி விவசாயிகளை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப பயிற்சி அளித்து வருகின்றனர். தோட்டக்கலையில் உள்ள தொழில்நுட்பங்கள் குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.
நேற்று மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கிளியநல்லூரில் வாழை விவசாயிகளுக்கு பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து செயல்விளக்கம் அளித்தனர். இயற்கை முறையில் பஞ்சகவ்யம் தயாரிப்பது அதைக்கொண்டு வாழை பயிர்களை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் மகளிர் தோட்டக்கலை கல்லூரி பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் சந்திரசேகர் தலைமையில் மாணவிகள் சர்மிளா, சிநேகப்பிரியா, சோபியா, சோபனா, சோபிகா, சிம்ரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.