கிருஷ்ணகிரி, நவ.15: கிருஷ்ணகிரி அடுத்த சின்னமுத்தூர் கம்பளிகான் தெருவில் எழுந்தருளியுள்ள புதூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இந்த விழாவினையொட்டி கடந்த 4ம் தேதி காலை முகூர்த்தக் கால்கோள் விழா மற்றும் முளைபாரி இடுதல், கங்கனம் கட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று அதிகாலை இரண்டாம் கால யாக பூஜை, விஷேச திரவிய ஹோமம், நாடி சந்தானம் ஆகிய நிகழ்ச்சிகளும், அதைத் தொடர்ந்து யாத்ராதானம் கடம் புறப்பாடு நிகழ்ச்சி மற்றும் புதூர் மாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் சின்னமுத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.