×

திருப்புத்தூரில் அட்டகாசம் கடையில் பொருள் வாங்குவதுபோல் பெண்ணிடம் 6 பவுன் தாலி பறிப்பு

திருப்புத்தூர், நவ.15: திருப்புத்தூர் அருகே 2 இளம்பெண்ணிடம் 9 பவுன் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.6 பவுன் தாலிச்செயினை பறித்துச்சென்ற மூவரை போலீசார் தேடி வருகின்றனர். திருப்புத்தூர் அருகே நெற்குப்பை சிங்கம்புணரி சாலையிலுள்ள மூங்கில்புரத்தை சேர்ந்தவர் கருப்பையா மனைவி வளர்மதி(33). பெட்டிக் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை கடையில் இருந்தார். அப்போது டூவீலரில் வந்த 3 இளைஞர்கள் ரூ.100 கொடுத்து பொருட்கள் வாங்கினர். அப்போது மீதி சில்லரை கொடுக்க வளர்மதி குனிந்த போது, அவரது கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலிச்செயினை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் நெற்குப்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருப்புத்தூர் அருகே திருவுடையார்பட்டியை சேர்ந்தவர் வீரசேகர் மனைவி பிரியதர்ஷினி(22). இவர் நேற்று மதியம் தனது தந்தை ராமகிருஷ்ணனுடன் திருவுடையார்பட்டியில் இருந்து தென்கரை ரோட்டில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்தொடர்ந்து கருப்பு கலர் டூவீலரில் வந்த 3 மர்ம நபர்கள், கம்பனூர் விலக்கு அருகே வண்டியை மறித்தனர். பிரியதர்ஷினி அணிந்திருந்த 7 பவுன் தங்க செயினை பறித்தனர். அப்போது அவர்களிடம் போராடி செயினை விடாமல் பிடித்துக்கொண்டார். அதில் மர்ம நபர்களை கையில் சிக்கிய 3 பவுனை மட்டும் எடுத்துக்கொண்டு தப்பிவிட்டனர். இதுகுறித்து நாச்சியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருப்புத்தூரில் அடுத்தடுத்து தொடரும் செயின் பறிப்பு சம்பவங்களால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Tags : buyer ,shop ,Tirupattur ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை 9...