தாரமங்கலம், நவ.14: தாரமங்கலம் அரசு பள்ளியில், மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோருக்கு மூளைக்காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், வட்டார வள மையம் மூலம் மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோருக்கு மூளைக்காய்ச்சல் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு முகாம், தாரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார கல்வி அலுவலர் முருகன் முன்னிலை வகித்தார். மேற்பார்வையாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். முதல் நாள் முகாமில் மூளைக்காய்ச்சல் பற்றிய அறிகுறிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், இரண்டாம் நாள் முகாமில் மூளைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. இந்த முகாமில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் முகாம் ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ், மணிவண்ணன், பாபு, பிரபாகரன், தங்கமணி ஆகியோர் செய்திருந்தனர்.