பெரியகுளம், நவ.14: பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 8ம் தேதி தொடங்கியது. நாள்தோறும் உற்சவர் அலங்கரிக்கப்பட்டு வீதிஉலா கொண்டு செல்லப்பட்டது. சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிலில் இருந்து உற்சவர் எழுந்தருளி கச்சேரி சாலையில் திருவள்ளுவர் சிலை, வரதராஜ பெருமாள் கோவில் அருகே, வடக்கு அக்ரஹாரம், தெற்குரதவீதி ஆகிய 4 இடங்களிலும் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். இன்று காலை கோவிலில் அன்னப்பாவாடை சாத்துப்படி நிகழ்ச்சி நடைபெறும். அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பின்னர் அன்னதானம் வழங்கப்படும். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அண்ணாத்துரை மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.