பணகுடி, நவ. 14: கூட்டப்புளி சுனாமி காலனியை சேர்ந்தவர் சந்தியாகு ராயப்பன் மகன் கிறிஸ்டோபர் (20). மீன்பிடிதொழில் செய்து வந்த இவரை, காதல் விவகார தகராறு வழக்கு விசாரணைக்காக பழவூர் போலீசார் அழைத்து உள்ளனர். கடந்த 11ம் தேதி இரவு தாயாரிடம் செல்போனில் பேசிய கிறிஸ்டோபர், போலீசார் தன்னை மிரட்டுவதாக கூறியுள்ளார். பின்னர் போலீஸ் விசாரணைக்கு பயந்து இதே ஊரில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் கிறிஸ்டோபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிந்த கிறிஸ்டோபர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிறிஸ்டோபரின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் எனக் கூறி கூட்டப்புளி ஆலயம் முன்பு தர்ணா போாட்டம் நடத்தி வருகின்றனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படவில்லை. இதுகுறித்து கிறிஸ்டோபர் உறவினர்கள் கூறுகையில், அரசு பள்ளி வளாக சுவற்றில் தனது சாவுக்கு காரணமென 4 பேரின் பெயர்களை கிறிஸ்டோபர் எழுதி வைத்துள்ளார். எனவே உண்மையான குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும், என்றனர்.