மதுரை, நவ.8: தீபாவளிக்கு வழக்கத்ைத விட அதிக அளவாக இந்த ஆண்டு சேர்ந்த 710 டன் குப்பைகளை மதுரை மாநகராட்சி ஊழியர்கள் சேகரித்தனர்.
மதுரை மாநகராட்சி சார்பில் மொத்தமுள்ள 100 வார்டுகளிலும் ஒவ்வொரு நாளும் குப்பை சேகரிக்கப்படுகிறது. உதவி செயற்பொறியாளர் ராமசாமி மேற்பார்வையில் சேகரிக்கப்படும் குப்பைகள், அவனியாபுரம் வெள்ளக்கல்லில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கிற்கு கொண்டு சென்று அங்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கப்படுகிறது. வழக்கமான நாட்களில் 100 வார்டுகளில் 600 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. முதல் நாள் நள்ளிரவு 12 மணியில் இருந்து மறுநாள் நள்ளிரவு 12 மணி வரையிலான காலக்கட்டத்தில் குப்பைகள் சேரும் அளவு கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு வழக்கத்தை விட அதிகளவாக 710 டன் குப்பை சேகரிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.