கிருஷ்ணகிரி, நவ.8: குடிநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். கிருஷ்ணகிரி அருகே தொன்னையன்கொட்டாய் பகுதியில் கலெக்டர் பிரபாகர் சுகாதார பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதி மக்கள், அவரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: எங்கள் பகுதியில் இருந்த குடிநீர் குழாயின் இணைப்பை, கால்வாய் சீரமைப்பு பணியின்போது துண்டித்து விட்டனர். 5 ஆண்டுகளாகியும் மீண்டும் குடிநீர் குழாய் இணைக்கப்படவில்லை. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகிறோம்.
இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவிலலை. குடிநீர் குழாயை மீண்டும் பொருத்தி சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாரியம்மன் கோயில் தெருவில், சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கியுள்ளது. இதனால் கொசு உற்பத்தி அதிகமாகி மக்கள் தினமும் நோய் பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளை நோக்கி செல்ல வேண்டியதுள்ளது. உடனடியாக கழிவுநீர் கால்வாய் அமைத்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.