புதுச்சேரி, நவ. 8: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தனது வீட்டில் சிறுவர், சிறுமிகளுடன் சேர்ந்து பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினார்.
தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகை புதுவையில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுச்சேரி மக்களுக்கு கவர்னர், முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இதனிடையே புதுச்சேரி எல்லையம்மன் கோயில் வீதியில் உள்ள முதல்வர் நாராயணசாமியின் வீட்டிற்கு புதுச்சேரி மற்றும் லாஸ்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் வந்தனர். அங்கிருந்த முதல்வர் நாராயணசாமிக்கு ரோஜாப்பூ கொடுத்து தீபாவளி வாழ்த்துக்களை கூறினர். அப்போது சிறுவர்களுக்கு இனிப்பு வழங்கிய முதல்வர், அவர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்து, மத்தாப்பு கொளுத்தி மகிழ்ந்தார்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி பட்டாசு வெடிக்க வேண்டுமென புதுச்சேரி அரசு அறிவித்திருந்தபடி காலை 7மணிக்குள் பட்டாசு வெடிப்பதை முடித்துக் கொண்ட முதல்வர் நாராயணசாமி, இதுபற்றி சில அறிவுரைகளை சிறுவர்களுக்கு கூறி வாழ்த்து வழியனுப்பி வைத்தார்.