×

மாமல்லபுரம் அருகே துணிகரம் வீட்டை உடைத்து திருடிய கொள்ளையர்கள் 3 பேர் சிக்கினர்

மாமல்லபுரம், நவ.2: மாமல்லபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 6.5 லட்சம் மதிப்புள்ள 33 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்த 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்த நகைகளை பறிமுதல் செய்தனர். மாமல்லபுரம் அருகே உள்ள தேவனேரி கிராமத்தை சேர்ந்த நரேன் என்பவர் கடந்த செப்டம்பர் 30ம் தேதி குடும்பத்துடன் திருப்பதி சென்று இருந்தார். பின்னர் அக்டோபர் 2ம் தேதி வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ. 6 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. புகாரின்படி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இதையடுத்து மாமல்லபுரம் டி.எஸ்.பி. சுப்பாராஜூ உத்தரவின் பேரில் மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு, சதுரங்கப்பட்டினம் உதவி ஆய்வாளர் முத்துக்குமார்,

மாமல்லபுரம் காவல் நிலைய தலைமை காவலர்கள் முரளிநாதன், சுரேஷ்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இப்படையினர் மேற்கொண்ட விசாரணையில், மேற்படி கொள்ளை சம்பவத்தில், அதே ஊரை சேர்ந்த ஜீனத், அஜித்குமார், சரவணன் ஆகியோர் ஈடுபட்டதாக தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து சுமார் 6.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 33 சவரன் தங்க நகைகளை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட மூவரும் திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : robbers ,house ,Mamallapuram ,Vadakara ,
× RELATED இந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா?