நாமக்கல், நவ.2:குமாரபாளையத்தில் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் 5 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நாமக்கல் எஸ்பியிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.குமாரபாளையம் காவேரி நகர், காந்தியடிகள் தெருவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நேற்று மாவட்ட எஸ்பி அருளரசுவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதன் விபரம்: குமாரபாளையம் காவேரி நகரில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். இப்பகுதியை சேர்ந்த ரவுடிகள் 5 பேர், அருந்ததியர் காலனி ஆற்றங்கரை அருகில் தினமும் நின்று கொண்டு, அந்த வழியாக செல்லும் பெண்களை ஆபாசமாக கேலி செய்கிறார்கள். தனியாக வரும் பெண்களை மிரட்டுவதுடன், தெரு விளக்குகளையும் உடைத்து விட்டனர். இதனால் அங்கு நிம்மதியாக இரவில் இருக்க முடியவில்லை.இரவு நேரங்களில் குடிபோதையில் தகராறு செய்வதுடன், வழிப்பறியிலும் ஈடுபடுகின்றனர். குறிப்பிட்ட அந்த 5 பேரால் எங்களின் நிம்மதி கெடுகிறது. அவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குள் உள்ளன. எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட எஸ்பி அருளரசு, குற்றச்செயலில் ஈடுபட்டு வருபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.