புதுச்சேரி, நவ. 2: புதுச்சேரி அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி விடுதலைக்கு போராடிய அனைத்து போராளிகளுக்கும் அதிமுக சார்பில் வாழ்த்துக்களை ரிவித்துக்கொள்கிறோம். புதுச்சேரியின் ஒற்றுமையாக செயல்பட வேண்டிய முதல்வர், துணை நிலை ஆளுனர் மோதல் போக்கை கடைபிடிக்கின்றனர். ஆனால் தேசிய ஒருமைப்பாட்டு விழாவில், இருவரும் கலந்து கொண்டது ஒரு நாடகத்தனமான செயல். தரம்தாழ்ந்து வரம்புமீறி முதல்வரை விமர்சித்து பேசிய கவர்னர் கிரண்பேடியும், அதே அளவு கவர்னரை விமர்சித்து கருத்து கூறிவரும் முதல்வரும், ஒரு நாள் எதிர்ப்பு மறுநாளில் ஒரே விழாவில் கலந்து கொள்வது வெட்கக் கேடானது. நேற்றைய தினம் கவர்னர் மாளிகையில் செயலர்கள் அனைவரையும் அழைத்து ஒரு விழா நடத்தியுள்ளார். அதில் 18 ஆண்டுகளாக புதுச்சேரியில் நீர்வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை. சிஎஸ்ஆர் நிதி மூலம் இதை வெற்றிகரமாக செய்ததாக கவர்னர் தெரிவித்துள்ளார். முதலில் நிதி வசூல் செய்யவில்லை என தெரிவித்த அவர், நிதி கொடுத்தவர்களை அழைத்து பாராட்டி விருது வழங்கியது முன்னுக்கு பின் முரணாக உள்ளது. சிஎஸ்ஆர் நிதி வசூல் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஆண்டுதோறும் வாய்க்காலை புனரமைக்கவும், சீரமைக்கவும் அரசு பல கோடி செலவு செய்துள்ளது. ஆனால் கவர்னர் 18 ஆண்டாக தூர்வாரவில்லை என கூறுகிறார். அந்த நிதி என்ன ஆனது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், நீர்பாசன பிரிவு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் பதில் சொல்ல வேண்டும். கவர்னர் அலுவலகத்தால் வசூலிக்கப்பட்ட நன்கொடை, சிஎஸ்ஆர் நிதி குறித்து முழுமையான தகவல் தெரிவிக்க வணே்டும். வெளிப்படையான நிர்வாகம் என கூறி வரும் கவர்னர், மக்களுக்கு இதுகுறித்து விளக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.