கடத்தூர், நவ.1: கடத்தூர் அடுத்த பசுவாபுரம் கிராமத்தில், விவசாயிகளுக்கு பண்ணை இயந்திர பயன்பாடு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. கடத்தூர் ஒன்றியம் பசுவாபுரம் கிராமத்தில், அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பண்ணை இயந்திர பயன்பாடு குறித்த பயிற்சி முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் வேல்முருகன் தலைமை வகித்து பேசுகையில், ‘சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு 75 முதல் 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. குழாய் அமைக்க 50 சதவீத மானியம், மானிய விலையில் விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது,’ என்றார். தொடர்ந்து கூட்டுப்பண்ணைய திட்டம், நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கம், பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம், நெற்பயிரில் ஆனைக்கொம்பன் புழு தாக்குதலுக்கு பயிர் பாதுகாப்பு மேலாண்மை, மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலுக்கு பயிர் மேலாண்மை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் கணேசன் முன்னிலை வகித்தார். ஆத்மா திட்டவட்டார மேலாளர் திருமால் நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை கிருஷ்ணமூர்த்தி, கபிலன் ஆகியோர் செய்திருந்தனர். முகாமில் கடத்தூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.