×

கேளம்பாக்கம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 3 மாணவர்கள் படுகாயம்

திருப்போரூர், நவ.1: கேளம்பாக்கம் அருகே மாம்பாக்கத்தில் தனியார் பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு திருப்போரூர், கேளம்பாக்கம், மேடவாக்கம், படூர், மேலக்கோட்டையூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வேன்கள் இயக்கப்படுகின்றன.
நேற்று மாலை 4.30 மணியளவில் பள்ளி முடிந்து மாணவர்கள் அவரவர் வேன்களில் ஏறிச்சென்றனர். மேடவாக்கம் செல்லும் மாணவர்கள் வழக்கம்போல் அவர்கள் செல்லும் வேனில் ஏறினர். 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் அந்த வேனில் பயணம் செய்தனர். பொன்மார் சமுதாயக்கூடம் அருகே சென்றபோது கடும் மழை பெய்துக் கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக டிரைவர் வேனை சாலை ஓரமாக திருப்பினார். அப்போது திடீரென நிலை தடுமாறி அருகிலுள்ள விவசாய நிலத்தில் வேன் கவிழ்ந்தது. இதனால் வேனில் இருந்த குழந்தைகள் கூச்சல் போட்டனர். இதையடுத்து அவ்வழியே சென்றவர்கள் மற்றும் அங்கு நின்றிருந்த பொதுமக்கள் ஓடி வந்து குழந்தைகளை மீட்டனர். இவ்விபத்தில் வேனில் பயணம் செய்த 1ம் வகுப்பு மாணவர்கள் அஸ்வின் (5), வேதவர்ணா (5), பிரணாப் கார்த்திக் (5) ஆகிய 3 மாணவர்கள் காயம் அடைந்தனர். 3 பேரும் மாடம்பாக்கததை சேர்ந்தவர்கள். இவர்கள் உடனடியாக ரத்தின மங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் சோழிங்கநல்லூரில் தனியார் மருத்துவமனையில் சே்ர்க்கப்பட்டனர். காயம் அடையாத மாணவர்கள் மாற்று வேனில் அழைத்துச் செல்லப்பட்டனர். வேன் டிரைவர் பொன்மாரை சேர்ந்த இன்பகுமார் தப்பியோடிவிட்டார்.
இவ்விபத்து குறித்து தாழம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : School van ,Kalambakkam ,
× RELATED வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில்...