×

அன்னூரில் வீட்டில் நடந்த கொள்ளையில் போலீஸ்காரருக்கு தொடர்பு?

கோவை, அக்.31: அன்னூரில் ஒரு வீட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த முகமூடி கொள்ளையில் போலீசாருக்கு தொடர்பிருக்கலாம், நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பாதிக்கப்பட்டவர் கோவை எஸ்.பி.,அலுவலகத்தில் நேற்று புகார் கொடுத்துள்ளார். கோவை அடுத்த அன்னூர் மெயின்ரோட்டில் அரிசி கடை வைத்திருப்பவர் விஜயகுமார்(45). கடையை ஒட்டி வீடு உள்ளது. இவரது வீட்டில் கடந்த ஏப்ரல் மாதம் ரூ.ஒரு லட்சம் மற்றும் 4 பவுன் நகை திருடு போனது. அப்போது வீட்டில் பதிவான சிசிடிவி காட்சியில், முகமூடி அணிந்த ஒருவர் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இது குறித்து விஜயகுமார் அன்னூர் போலீஸ் ஸ்டேஷனில் சிசிடிவி காட்சியுடன் கடந்த ஏப்ரல் மாதம் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில், அவர் நேற்று கோவை எஸ்.பி.,பாண்டியராஜனிடம் கொடுத்துள்ள மனுவில், சிசிடிவி காட்சியில் பதிவான முகமுடி மனிதர், அன்னூர் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிபவரை போல் உள்ளது. இதனால், அவர் இத்திருட்டில் ஈடுபட்டிருக்கலாம், இதையறிந்த அன்னூர் போலீசார் வழக்குபதிவு செய்யாமல் தவிர்த்து விட்டனர் என்று கருதுகிறேன். இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.

Tags : policeman ,Annur ,house ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்