திருச்சி, அக் 30: திருச்சி மாவட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவித் தொகை, முதிர்கன்னி உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித் தொகை போன்ற மாதாந்திர உதவித் தொகை பெறும் பயனாளிகளுக்கு 2018ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்குரிய இலவச வேட்டி மற்றும் சேலைகள் நாளை(31ம் தேதி) முதல் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட உள்ளது.
வேட்டி சேலை முறையாக வழங்குவதை வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் கண்காணிப்பார்கள். எனவே மேற்கண்ட திட்டங்களின் கீழ் மாதாந்திர உதவித் தொகை பெறும் பயனாளிகள் தங்களுக்கு தொடர்புடைய அந்தந்த கிராம நிர்வாக அலுவலகங்களை அணுகி தீபாவளி பண்டிகைக்குரிய இலவச வேட்டி மற்றும் சேலைகளை பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் ராஜாமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.