காரியாபட்டி, அக். 30: காரியாபட்டி அருகே, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோதச் செயல் நடக்கும் அவலம் உள்ளது. பள்ளியில் உள்ள பொருட்களுக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. காரியாபட்டி அருகே, பனிக்கனேந்தல் கிராமத்தில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பஸ்நிலையத்தில் இருந்து பள்ளிக்கு 2 கி.மீ தூரம் நடக்க வேண்டும். பள்ளியை சுற்றி சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரத்தில் சமூக விரோதச் செயல்கள் நடக்கும் அபாயம் உள்ளது. பள்ளியில் உள்ள பொருட்களுக்கும் பாதுகாப்பு இல்லை. சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்திருப்பதால் பள்ளிக்கு வரும் ஆசிரியைகளுக்கும்,
மாணவர்களும் பாதுகாப்பு கேள்விகுறியாக உள்ளது. கழிவறை வசதியில்லை. பள்ளிச் சுவர்களில் ஆங்காங்கே சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் தெரிகின்றன. நல்ல குடிநீர் இல்லை. கழிவறைகள் மோசமாக உள்ளன. மாணவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க திறந்தவெளிக்குச் செல்கின்றனர்.எனவே, மாணவர்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.