வாழப்பாடி, அக்.30: வாழப்பாடி அரசு மருத்துவமனையில், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா திடீர் ஆய்வு செய்தார். வாழப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையில் வாழப்பாடி, பேளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், சீதோஷ்ண நிலை மாறியுள்ளதால், காய்ச்சல் மற்றும் சளி போன்ற பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால், நோயாளிகளுக்கு போதிய மருத்துவ வசதிகள் செய்து தரப்படுவதிவில்லை என புகார் எழுந்தது. இதை தொடர்ந்து, சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, நேற்று வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த நோயாளிகளிடம் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். போதிய வசதிகள், முக்கிய மருத்துவ பிரிவு இல்லை என அவர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து வாழப்பாடி அரசு மருத்துவமனையில் உரிய மருத்துவ வசதிகள் செய்து தர, திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்படும் என்றார். இந்த ஆய்வின் போது, திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.