×

திருத்தணி அருகே சோகம் 2 பைக்குகள் மோதி விபத்து: 3 வாலிபர்கள் பலி

திருத்தணி, அக்.30: திருத்தணி அருகே  2 பைக்குகள்  மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணி அருகே முருகம்பட்டு கிராமம் உள்ளது. அப்பகுதியை சேர்ந்த ஒரு நபருக்கு நேற்று முன்தினம் இரவு திருத்தணி - சித்தூர் சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முருகம்பட்டு கிராமத்தை சேர்ந்த கன்னிகான் மகன் கதிர்வேல் (22), அதே கிராமத்தை சேர்ந்த அஜீத்குமார் (22) ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். பின்னர், இருவரும் அன்று இரவு  முருகம்பட்டு கிராமத்துக்கு பைக்கில் திரும்பி கொண்டிருந்தனர். அதே நேரத்தில் பொதட்டூர்பேட்டை அருகே பாண்டரவேடு கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் (40), அதே பகுதியை சேர்ந்த அரிகிருஷ்ணன் (24) ஆகிய இருவரும் திருத்தணி நோக்கி எதிர்புறமாக மற்றொரு  பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.

 முருகம்பட்டு கிராமத்தில் உள்ள  தமிழ்நாடு ஓட்டல் எதிரே இரு பைக்குகளும் ஒன்றோடொன்று வேகமாக மோதிக்கொண்டன.  இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்த அஜித்குமார், பாஸ்கர், கதிர்வேல் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.  உயிருக்குப் போராடிய அரிகிருஷ்ணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்புகாரின்பேரில் திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் நிவாசன் வழக்குப்பதிவு செய்தார். 3 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்ர். மேலும், போலீசார் வழக்கு பதிந்து விபத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றார். ஒரே கிராமத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் விபத்தில் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அஜித்குமாரின் பெற்றோர் கூறுகையில், ‘எங்களுக்கு ஒரே மகன். நாங்கள் கூலிவேலை செய்து அவனை காப்பாற்றினோம்.  திருமண வரவேற்பில் கலந்து கொள்ள நண்பருடன் பைக்கில் சென்கிறேன் என்று கூறிவிட்டு சென்றான், அதன்பிறகு விபத்தில் இறந்துவிட்டதாக செய்தி அறிந்ததும் துடித்துவிட்டோம். ஒரே மகனை இழந்த நாங்கள், இனி எப்படி உயிர் வாழப் போகிறோம்?’ என கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags : bikes crash ,accident ,Tiruttani ,youth kills ,
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...