×

பெட்டிக்கடைகாரர் கொலையில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் பிடிபட்டனர்: மேலும் இருவருக்கு வலை

பெரும்புதூர், அக்.30: பெரும்புதூர் அருகே பணப்பாக்கத்தில் டாஸ்மாக் கடை அருகே பெட்டிக்கடைக்காரரை அடித்து கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி மற்றும் அவனது கூட்டாளியை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். பெரும்புதூர் அருகே நாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன் (52), இவர் பணப்பாக்கம் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடை அருகே பெட்டிக்கடை வைத்து நடந்தி வந்தார். இவர் மகன் ரவிக்குமார் (30). இந்நிலையில், பழனியப்பன் வசித்து வந்த அதே குடியிருப்பு பகுதியை சேர்ந்த பாண்டியன் என்ற நபர் கடந்த 26ம் தேதி பணப்பாக்கம் டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு வந்து பழனியப்பனிடம் வீன் தகராறில் ஈடுபட்டார். இதொடர்பாக நடந்த மோதலில் பாண்டியன் தனது கூட்டாளிகளுடன் வந்து பழனியப்பன் மற்றும் அவரது மகன் ரவிக்குமாரை இரும்புராடால் சரமாரியாக தாக்கினர்.

இதில், பலத்த காயம் அடைந்த பழனியப்பன் பரிதாபமாக இறந்தார். ரவிக்குமார் சென்னையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பாண்டியன் மற்றும் அவர் கூட்டாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மணிமங்கலம் போலீசார் அதே பகுதியில் தலைமறைவாக இருந்த பாண்டியன் (எ) அருள் பாண்டியன் (23) மற்றும் அவரது கூட்டாளி சதிஷ் (எ) சக்தி (27) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை காவல்நிலையம் அழைத்து வந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வழக்கில் தொடர்புடைய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Two ,murder ,coach ,
× RELATED வத்தலக்குண்டுவில் அச்சுறுத்தும் தெருநாய்கள்