மன்னார்குடி, அக். 26: கோட்டூரில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. இதில் 200 மாற்றுத்திறனாளி குழந்தைகள் பங்கேற்றனர்.கோட்டூர் வட்டார வளமையத்தில் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் மூலம் 6 முதல் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜோதி தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுனர் சுப்ரமணியன் வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாஸ்கர், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை மாவட்ட உதவி திட்ட அலுவலர் கலைவாணன் தொடக்கி வைத்தார். மனநல மருத்துவர் எலும்பு முறிவு அரசு மருத்துவர் அப்துல்கவி, காது மூக்கு தொண்டை மருத்துவர் சிவசுப்பிரமணியன் மற்றும் பரிசோதனையாளர் குழுவினர்கள் இம்முகாமில் கலந்துகொண்ட 200 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் மதிப்பீடு செய்தனர். மாவட்ட மாற்றுத்திறளிகள் நல அலுவலர் சந்திரமோகன் 19 குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டையை வழங்கினார். ஒன்றிய கல்வி அலுவலர்கள் சிவக்குமார், குமரேசன் ஆகியோர் கலந்துகொண்டு 90 குழந்தைகளுக்கு இலவச பேருந்து அட்டை வழங்கி சிறப்பித்தனர். மேலும் இம்முகாமில் கலந்துகொண்ட 25 குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கிடவும், 7 பேருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கும் பரிந்துரை செய்யப்பட்டது. ஆசிரியர் பயிற்றுனர்கள் சக்திவேல், சந்திரசேகரன், சிறப்பாசிரியர்கள் வீரபாண்டியன், சரண்யா இயன் முறை மருத்துவர் தீபா, அலுவலக பணியாளர்கள், மைய அலுவலர்கள் பங்கேற்றனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்வமணி நன்றி கூறினார்.