×

திருத்துறைப்பூண்டி அருகே போலீஸ் ஜீப் உள்பட 3 வாகனங்கள் மீது கார் மோதல்: எஸ்ஐ, ஏட்டு படுகாயம்

திருத்துறைப்பூண்டி, அக்.26: திருத்துறைப்பூண்டி அருகே வாகன சோதனைக்கு சென்ற போலீஸ் ஜீப் உள்பட 3 வாகனங்கள் மீது கார் மோதியதில் எஸ்.ஐ, ஏட்டு படுகாயமடைந்தனர்.
  திருத்துறைப்பூண்டி அருகே நாகை பைபாஸ் சாலை கொக்கலாடி மாரியம்மன் கோயில் அருகில் நேற்று அதிகாலை திருத்துறைப்பூண்டி காவல் நிலைய எஸ்.ஐ கல்யாணம் (55), ஏட்டு லோகநாதன் (48) ஆகியோர் நாகை மாவட்டம் தாணிக்கோட்டகத்திலிருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி சென்ற டிப்பர் லாரியை மறைத்து சோதனை செய்துகொண்டிருந்தனர். மணல் லாரிக்கு ஆதரவாக தாணிக்கோட்டகத்தை சேர்ந்த பழனிவேல் என்பவர் காளிதாஸ் காரில் வந்து போலீசாருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது சிவகங்கை மாவட்டம் காளையர்கோவிலிலிருந்து வேளாங்கண்ணிக்கு சென்ற கார் அதிவேகமாக வந்து முதலில் காளிதாஸ் காரின் வலதுபக்கம் ஒருபுறம் மோதி, பின்னர் லாரியின்  வலதுபக்கத்தில் மோதி, அதன் பிறகு இடதுபக்கம் நின்ற போலீஸ் ஜீப் மீது  மோதியது. இதில் எஸ்.ஐ., கல்யாணம், போலீஸ் ஜீப் ஓட்டிய ஏட்டு லோகநாதன் ஆகியோர் படுகாயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாணிக்கோட்டகம் கார் உரிமையாளர் காளிதாஸ்க்கு தலையில் அடிபட்டு தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் காரில் வந்த காளையார்கோவில் ராணுவ வீரர் பிரபு (36) காயமடைந்தார்.
 இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் காளையார்கோவில் கார் டிரைவர் ரோமாரியோ ( 23) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Car collision ,police jeep ,Tiruthuraipondi ,SI ,
× RELATED மின் கம்பத்தில் கார் மோதல் 2 பேர் கருகி பலி