நாகர்கோவில், அக்.26: காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், 30 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், 25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள சத்துணவு மையங்களை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும், பணிக்கொடை ₹5 லட்சமாக உயர்த்த வேண்டும். சமையலர்களுக்கு ₹3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். மாணவர்
களுக்கு தரமான உணவு வழங்க மானியத்தை உயர்த்த வேண்டும். தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில், காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்திருந்தது.இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் தடையை மீறி காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று சத்துணவு ஊழியர்கள் அறிவித்திருந்தனர். அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று காலையில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் திரண்டனர். கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
இந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் வில்பிரட் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் தமிழரசன், மாநில செயற்குழு உறுப்பினர் தங்கம், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பகவதியப்ப பிள்ளை, மாவட்ட செயலாளர் கிறிஸ்டோபர், மாவட்ட பொருளாளர் சுமதி, மாவட்ட துணை தலைவர் லீடன்ஸ்டோன், வருவாய்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கோலப்பன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்.