திருவாரூர், அக். 25: திருவாரூரில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை திறக்க வேண்டும் என அரசுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட மாநாடு திருவாரூரில் நேற்று மாவட்ட தலைவர் கோசிமணி தலைமையிலும், மாவட்ட செயலாளர் ஜோதிபாசு முன்னிலையிலும் நடைபெற்றது. மாநிலத் தலைவர் செந்தில், துணை தலைவர் ரவிச்சந்திரன், மாநில செயலாளர் பாலா உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இதில், திருவாரூரில் கட்டிமுடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள புதிய பேரூந்து நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும், ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும், அரசு பள்ளிகளை மூடும் நடவடிக்கையினை தமிழக அரசு கைவிட வேண்டும், திருவாரூர் மாவட்டத்தில் கிடைக்கக்கூடிய மூங்கில் மற்றும் வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தி தொழிற்சாலை ஒன்று அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.