×

ஏசியில் மின்கசிவால் வீட்டில் தீ விபத்து தியேட்டர் உரிமையாளர் உடல் கருகி பரிதாப சாவு

சென்னை: ஆவடி அருகே வீராபுரத்தில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவால் வீடு தீப்பிடித்து எரிந்து தியேட்டர் உரிமையாளர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
 ஆவடி வீராபுரத்தில் வசித்து வந்தவர் ராஜன் (64). ஆவடியில் உள்ள பிரபல தியேட்டர் உரிமையாளர். திருமணம் ஆகவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே வீல் சேரில் இருந்து வந்தார். ஆவடி, கன்னியம்மன் நகரை சேர்ந்த பானுமதி என்பவர் ராஜனை கவனித்து வந்தார்.
நேற்று மாலை 4.30 மணியளவில் பானுமதி டீ போட்டு ராஜனுக்கு கொடுத்துவிட்டு வீட்டில் இருந்து கிளம்பினார். சிறிது தூரம் சென்றபோது ராஜன் வீட்டில் இருந்து கரும்புகை வந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்துக்கு தெரிவித்தார். இதற்கிடையே வீடு திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

தகவலறிந்து, தீயணைப்பு அதிகாரி சிவகுமார் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரத்துக்கு போராடி தீயை அணைத்தனர். இதன் பிறகு தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று பார்த்தபோது ராஜன் தீயில் கருகி சடலமாக கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வீட்டில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, வீடு தீப்பிடித்து எரிந்து உள்ளது. இதில் வெளியேற முடியாத ராஜன் உயிரோடு தீயில் கருகி பலியானது தெரிந்தது.

Tags : fire accident ,house ,theater owner ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...