கிருஷ்ணகிரி, அக்.23: போச்சம்பள்ளி அருகே பட்டகரஅள்ளி கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தார்சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என, கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், நேற்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் போச்சம்பள்ளி அடுத்த அகரம் பட்டகரஅள்ளி கிராம மக்கள் கலெக்டர் பிரபாகரனிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:
பட்டகரஅள்ளி கிராமத்தில் பெரும்பாலானோர் தங்களது விளைநிலங்களிலேயே வீடு கட்டி வசித்து வருகின்றனர். புறம்போக்கு நிலத்தில் உள்ள மண் சாலை வழியாக தான், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இறந்தவர்களின் உடல்களையும் இந்த சாலை வழியாக தான் எடுத்துச்செல்கின்றனர். இந்த நிலையில், இந்த கிராமத்தைச் சேர்ந்த சிவன், வேலாயுதம் ஆகியோர், அரசு புறம்போக்கு நிலம் மற்றும் ஏரிக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து, பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஆக்கிரமிப்பு செயயப்பட்டுள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த மண் சாலையை தார்சாலையாக மாற்றி, சாலையின் இருபுறமும் கால்வாய் அமைத்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.